

திருவனந்தபுரம்
கேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. உச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், தமிழகத்தில் சில பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துவோம் என கேரள முதல்வர் ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என கேரளாவில் நேற்று பாஜக-வினர் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் "மண்டல பூஜைக்காக நாளை சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட உள்ள நிலையில், கோவிலுக்கு வரும் பெண்கள் உள்பட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்து நல்ல தீர்ப்பு வழங்கும் வரை சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கான ஆபரண பெட்டியை அனுப்ப முடியாது என்று பந்தளம் மன்னர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்துவம் உண்டு, சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் சுகாதாரக்கேடு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சபரிமலை கோயில் விவகாரம் தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து உள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம்போர்டு தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சபரிமலை கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜ குடும்பம், தந்தரிகள் சமாஜம், ஐயப்ப சேவா சங்கம், ஐயப்ப சேவா சமாஜம், யோக சேமசபா ஆகியோருக்கு தேவசம் போர்டு அழைப்பு விடுத்து இருந்தது. இதன் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசும், தேவசம் போர்டும் உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அது தொடர்பான தீர்ப்பு வரும்வரை சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும். தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என்று இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வற்புறுத்தினார்கள்.