வைகாசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டது சபரிமலை கோவில் நடை

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
வைகாசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டது சபரிமலை கோவில் நடை
Published on

சபரிமலை,

சபரிமலையில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர சித்திரை விஷூ உள்பட விசேஷ நாட்கள் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி வைகாசி மாத பூஜைக்காக கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இதையடுத்து 18-ம் படிக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள கற்பூர ஆழியில் நெருப்பு மூட்டப்பட்டது. பிறகு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பயபக்தியுடன் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

வருகிற 19-ந் தேதி வரை 5 நாட்கள் வழிபாடு நடைபெறுகிறது. இந்த நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலசாபிஷேகம், களபாபிஷேகம், படி பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும்.

பிரதிஷ்டை தினம்

5 நாட்கள் பூஜை முடிவடைந்ததும் 19-ந்தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பிறகு பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு வருகிற 29-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. 30-ந்தேதி பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவும் நடைபெற்று வருகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com