அனில்தேஷ்முக் சார்பில் சச்சின் வாசே மாமூல் வசூலித்த பார் உரிமையாளர்கள் பெயர் பட்டியல்

முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் சார்பில் மாமூல் வசூலித்த பார் உரிமையாளர் பெயர் பட்டியலை சச்சின் வாசே வழங்கி இருப்பதாக கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்தது.
அனில்தேஷ்முக் சார்பில் சச்சின் வாசே மாமூல் வசூலித்த பார் உரிமையாளர்கள் பெயர் பட்டியல்
Published on

அனில்தேஷ்முக் கைது

மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங், முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீது மாதம் ரூ.100 கோடி மாமூல் புகாரை கூறினார். இந்த புகார் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதில் கடந்த 1-ந் தேதி அனில் தேஷ்முக் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்றார். சுமார் 12 மணி நேர விசாரணைக்கு பிறகு நள்ளிரவில் அனில்தேஷ்முக்கை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது. லஞ்ச பணம் ரூ.4.70 கோடியை போலி நிறுவனங்கள் மூலம் நாக்பூரில் சேர்ந்த ஸ்ரீசாய் சிக்சான் சனஸ்தா கல்வி நிறுவனத்திற்கு திருப்பி விட்டதாக அனில்தேஷ்முக் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது.

பெயர் பட்டியல்

அனில்தேஷ்முக்கை 6-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில் விசாரணை காலம் முடிந்து நேற்று அமலாக்கத்துறை அனில்தேஷ்முக்கை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது மேலும் 9 நாட்கள் அவரை தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரியது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வக்கீல் வாதிடுகையில், அனில் தேஷ்முக் சார்பில் வெடிகுண்டு கார் வழக்கில் கைதாகி உள்ள போலீஸ் அதிகாரி சச்சின் வாசே மாமூல் வசூலித்து உள்ளார். அவர் மாமூல் வசூலித்த மதுபான விடுதி உரிமையாளர்களின் பட்டியலை கொடுத்துள்ளார். அனில் தேஷ்முக் குடும்பத்தினர் நடத்தும் 27 நிறுவனங்கள் இந்த மாமூல் மூலம் பயன் அடைந்துள்ளன. எனவே அவரிடம் மேலும் விசாரிக்க வேண்டியது இருப்பதால், அமலாக்கத்துறை காவலில் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

ஆனால் இதை கோர்ட்டு ஏற்க மறுத்தது. இதையடுத்து அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com