

பெங்களூரு,
பெங்களூரு எலகங்கா அருகே உனசமாரனஹள்ளியில் 500 ஆண்டுகள் பழமையான மட்டேவனபுரா மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக சிவாச்சாரியா இருந்து வருகிறார். இவரது மகன் தயானந்த். சாமியாரான இவரை, மடத்தின் அடுத்த மடாதிபதியாக நியமிக்க சிவாச்சாரியா மடாதிபதி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் புதிய மடாதிபதியாக சாமியார் தயானந்தை நியமிக்கக்கூடாது என்று பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
ஆபாச வீடியோ
இந்த நிலையில், சாமியார் தயானந்த் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் நேற்று சமூக வலைத்தளங்களிலும், கன்னட செய்தி தொலைக்காட்சி சேனல்களிலும் வெளியானது. மேலும் சாமியார் தயானந்துடன் வீடியோவில் ஆபாசமாக இருக்கும் பெண் கன்னட நடிகை என்பதும், அவர் சில கன்னட படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்திருப்பதும் தெரியவந்தது.
இந்த வீடியோ காட்சிகள் வெளியானதும் மடத்திற்கு நூற்றுக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென்று மடத்தை முற்றுகையிட்டு சாமியார் தயானந்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மேலும் சாமியார் தயானந்திற்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
போலீசார் விசாரணை
மடத்திற்குள் சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சாமியார் தயானந்த் மடத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டது தெரிய வந்தது. இதனால் சாமியாரை கைது செய்ய வேண்டும் என்று கூறி பொதுமக்களும், பக்தர்களும் மற்றும் மடத்தின் நிர்வாகிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். துணை போலீஸ் கமிஷனர் கிரீஸ் நிருபர்களிடம் கூறுகையில், ஒரு பெண்ணுடன் தயானந்த் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அந்த பெண் போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை. அவர் புகார் கொடுத்தால் மட்டுமே தயானந்தை கைது செய்ய முடியும் என்றார்.
அதைத்தொடர்ந்து, மடத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றார்கள்.
ஆனாலும் மடத்தின் நிர்வாகிகள் சிலர், தயானந்திற்கு எதிராக தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பணம் பறிக்க திட்டம்
இதற்கிடையில், சாமியார் தயானந்துடன், அந்த நடிகைக்கு 2 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்ததாகவும், சாமியாருடன் நெருக்கமாக இருப்பது போன்று வீடியோ எடுத்து, அவரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில், சாமியார் தயானந்துடன் நெருக்கமாக இருக்கும் பெண், நான் அல்ல என்று அந்த நடிகை மறுத்துள்ளார்.
இந்த நிலையில், நடிகையுடன், சாமியார் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ தொடர்பாக சிக்கஜாலா போலீஸ் நிலையத்தில் மடத்தின் நிர்வாகி ஒருவர் புகார் அளித்துள்ளார். உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு, தயானந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சிக்கஜாலா போலீசார் தெரிவித்துள்ளனர்.