லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அகிலேஷ்

லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் உறவினர்களை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அகிலேஷ்
Published on

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் சொந்த ஊரான திகுனியாவில் கடந்த 3-ந்தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக இருந்தது. அவர்களுக்கு எதிர்ப்பு நூற்றுக்கணக்கான விவசாயிகள் திகுனியா-பல்பீர்பூர் சாலையில் திரண்டனர்.

அப்போது, விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அங்கு மூண்ட கலவரத்தில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால், லகிம்பூர் வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள் உள்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

விவசாயிகள் மீது காரை ஏற்றிய ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் எனவும், அவரது தந்தையும், மத்திய மந்திரியுமான அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் இந்த வன்முறை தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இதற்கிடையில், இந்த வன்முறை தொடர்பாக மத்திய மந்திரியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆஷிஷ் பாண்டே மற்றும் லவ்குஷ் ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். மத்திய மந்திரியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் பேசுகையில், உண்மையை தெரிந்துகொள்ளும் விதமாக வன்முறையில் பதியப்பட்ட வீடியோக்களையும், தகவல்களையும் பகிர்வதை தடுக்கவே இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com