

புதுடெல்லி,
உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாரநாத் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைமிக்க தருணம் என்று பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சாரநாத் தலம் கௌதம புத்தரின் ஆழமான தொடர்புடையது என்றும், அறிவு, கருணை மற்றும் நல்லிணக்கம் குறித்த புத்தரின் காலத்தால் அழியாத போதனைகள் உலகத்தையே ஈர்க்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். வாரணாசியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாரநாத், உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிக முக்கியமான புனித தலமாகும்.
கௌதம புத்தர் தனது முதல் போதனையை வழங்கிய இடம் என்பதால், வரலாற்று ரீதியாக இது ஈடு இணையற்ற முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. யுனெஸ்கோவின் இந்த அங்கீகாரம் இந்தியாவின் ஆழ்ந்த நாகரிக மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றுகிறது. மேலும், சாரநாத் தலத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து அதிகமான மக்கள் வருகை தந்து, புத்தரின் உன்னதமான லட்சியங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ள இது ஊக்கமளிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவின் பழமையான பௌத்த தலம் சாரநாத் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதை யுனெஸ்கோ தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தியால் சாரநாத் பகுதியைச் சேர்ந்த மக்களும், புத்த மதத்தினர் பலரும் பெருமிதம் அடைந்துள்ளனர்.