தவணைகளுக்கு 2 வருடம் வரை கூடுதல் அவகாசம்: எஸ்.பி.ஐ வங்கி அதிரடி

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, கடன் தவணையை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க சலுகை அளித்துள்ளது.
தவணைகளுக்கு 2 வருடம் வரை கூடுதல் அவகாசம்: எஸ்.பி.ஐ வங்கி அதிரடி
Published on

புதுடெல்லி,

கொரோனா தாக்கம் காரணமாக வங்கிகள், கடன் தவணையை செலுத்த ஆறு மாத கால அவகாசம் வழங்கியது. இதனால், ஆறு மாதத்திற்கு கடன் தவணை செலுத்த தேவையில்லை. ஆனால், இதற்கான வட்டியுடன் சேர்த்து கடன் மறுசீரமைப்பு செய்யப்படும். இதனிடையே, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, கடன் தவணை செலுத்துவதை இரண்டு ஆண்டுகள் வரை தள்ளி வைக்கலாம் என்று அறிவித்துள்ளது.

இதற்கான வழிகாட்டுதல்களையும் தனது இணையதளத்தில் எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ளது. வீட்டுக்கடன், வாகனக்கடன் என அனைத்து கடன்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்பாக கடன் பெற்றவர்கள் இந்த கடன் சலுகையை கோர தகுதி பெற்றவர்கள். இவர்கள் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை கடன் தவணைகளை தாமதம் இன்றி செலுத்தியிருக்க வேண்டும். கொரோனா ஊரடங்கால், ஏற்பட்ட வருவாய் இழப்புக்கான ஆதாரங்களையும் சமர்பிக்க வேண்டும்.

எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கடன் எண்ணை பதிவு செய்தால் உங்களுக்கான சலுகை விவரங்கள் தெரிய வரும். மாற்றாக வங்கிக்கிளைக்கு நேரில் சென்றும் தவணை சலுகையை பெறலாம். டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்த சலுகைக்கு விண்ணப்பிக்கலாம். கடன் தவணைகளை 24 மாதம் வரை தள்ளிப்போடலாம். சலுகைக்காலத்திற்கு பிறகு வங்கி கடன் தவணை காலத்தை மறுசீரமைப்பு செய்து கொள்ளலாம்.

வேறு கடன்கள் பெறுவதை வங்கிகள் மறுக்க முடியாது. கடன் தவணை மட்டுமே ஒத்திவைக்கப்படுமே தவிர வட்டிக்கு எந்த விலக்கும் இல்லை. எனவே, எத்தனை மாதங்கள் சலுகை பெற்றாலும் அதற்கான வட்டியை திரும்ப செலுத்தியே ஆக வேண்டும். தவணைகளோடு வட்டியும் சேருவதால் மாத தவணை தொகை அதிகரிப்பதோடு தவணைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தவணை சலுகை பெறுவோரிடம் 0.35 சதவிதம் வட்டி வ வசூலிக்கப்படும் எனவும் எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com