

புதுடெல்லி,
சுமார் 10 கோடி மக்கள் தொகை கொண்ட பீகாரில் கடந்த 10 ஆண்டுகளாக அரசே 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில், நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டதும் மதுவிலக்கு கொண்டு வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.
மதுவிலக்கு அமலுக்கு வந்த பிறகு, பீகார் மாநிலத்தில் உள்ள மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தங்களிடம் உள்ள மதுபானங்களையும் மூலப்பொருட்களையும் அகற்ற மே 31 ஆம் தேதி வரை கெடு நிர்ணையிக்கப்பட்டது. இந்த கெடுவை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன. இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு நீதிபதி ஏகே சிக்ரி முன் விசாரணைக்கு வந்தது.
மது விலக்கு அமல்படுத்தப்பட்டதால் மிகப்பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தங்களிடம் இருக்கும் ரூ.200 கோடி மதிப்பு உள்ள மதுபானங்களை மது விலக்கு இல்லாத வேறு மாநிலங்களுக்கு எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரியது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் மதுபானங்கள் மற்றும் மூலப்பொருட்களை அகற்ற ஜூன் 31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.