தமிழக தேர்தல் தொடர்பான மனுக்கள்: விரைந்து முடிக்க கோரிய பொதுநல மனுவை விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டு மறுப்பு

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக (TVK) கட்சி, இந்த ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
தமிழக தேர்தல் தொடர்பான மனுக்கள்: விரைந்து முடிக்க கோரிய பொதுநல மனுவை விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டு மறுப்பு
Published on

புதுடெல்லி,

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான 54 தேர்தல் மனுக்களை விரைந்து முடிக்குமாறு சென்னை ஐகோர்ட்டிற்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டு இன்று ( வியாழக்கிழமை) மறுத்து தெரிவித்துள்ளது.

தவறான முன்னுதாரணம்

பொதுநல மனுதாரர் கே.வெங்கடாசலபதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.எஸ்.நாயுடு, தேர்தல் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க சென்னை ஐகோர்ட்டில் ஒரு தனி அமர்வை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்விடம் வலியுறுத்தினார்.

மனுவை விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி, "இது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும்" என்று கூறினார். இருப்பினும், இந்த நிவாரணத்தை பெற சென்னை ஐகோர்ட்டை அணுக மனுதாரருக்கு சுப்ரீம்கோர்ட்டு அமர்வு அனுமதி அளித்தது.

சென்னை ஐகோர்ட்டு

முன்னதாக வழக்கறிஞர் சமீர் மாலிக் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், "17-வது தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள 54 தேர்தல் மனுக்களை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (RPA), 1951-ன் பிரிவு 86(7)-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஆறு மாத காலத்திற்குள்ளோ அல்லது சென்னை ஐகோர்ட்டு பொருத்தமானதாக கருதும் காலத்திற்குள்ளோ விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.

ஜூன் 3 மற்றும் ஜூன் 18 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த தேர்தல் மனுக்கள், மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களின் செல்லுபடியாகும் தன்மையை சவால் விடுவதாக இருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜனநாயகத்தை நிலைநாட்ட

மேலும் தேர்தல் செயல்முறையின் தூய்மையை பாதுகாக்கவும், ஜனநாயகத்தை நிலைநாட்டவும், தேர்தல்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை தக்கவைக்கவும் சரியான நேரத்தில் தீர்ப்பளிப்பது அவசியம் என்றும் அந்தமனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com