நுபுர் சர்மாவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், நபிகள் நாயகம் குறித்து தான் தெரிவித்த சர்ச்சை கருத்தை திரும்பப் பெற்றுக்கொண்ட பின்னரும் பல்வேறு தரப்பிலிருந்து கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. எனவே, தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஆஜராவதில் ஆபத்து உள்ளதால், அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

அந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

நுபுர் சர்மா சார்பில் மூத்த வக்கீல் மணீந்தர் சிங் ஆஜராகி, அவர் மீதான அனைத்து வழக்குகளுக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நுபுர் சர்மா சென்று தடை பெற வேண்டும் என்று நினைக்கவில்லை. அவரது மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கும், டெல்லி போலீஸ், மராட்டியம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், அசாம் மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம். வழக்கு விசாரணையை ஆகஸ்டு 10-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதுவரை நுபுர் சர்மாவை கைது செய்யவும் இடைக்கால தடை விதிக்கிறோம் என உத்தரவில் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com