அயோத்தி வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்ப முடியுமா? - அறிக்கை தாக்கல் செய்ய பதிவாளருக்கு உத்தரவு

அயோத்தி வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்ப முடியுமா? என்பதை தெரிவிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அயோத்தி வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்ப முடியுமா? - அறிக்கை தாக்கல் செய்ய பதிவாளருக்கு உத்தரவு
Published on

புதுடெல்லி,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தினசரி அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த விசாரணையை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோவிந்தாச்சார்யா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வுக்கு கடந்த 6-ந்தேதி அனுப்பி வைத்தது.

இந்த நிலையில் அயோத்தி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கோவிந்தாச்சார்யா சார்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் ஆஜராகி வாதிட்டார்.

அவர் கூறுகையில், அயோத்தி வழக்கின் மனுதாரர்கள் சுப்ரீம் கோர்ட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் இந்த விசாரணையில் பங்கேற்க பல மனுதாரர்களால் தினந்தோறும் வர முடியாது. எனவே இந்த விசாரணையை நேரலையில் ஒளிபரப்பினால் அவர்களும் பலன்பெற முடியும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்ப முடியுமா? என்பதை தெரிவிக்குமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டனர். மேலும் நேரலையில் ஒளிபரப்ப முடியுமென்றால், எவ்வளவு நாட்களில் ஒளிபரப்பை தொடங்க முடியும்? என்று அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உடனே வக்கீல் விகாஸ் சிங், இதற்காக பதிவாளருக்கு ஒரு காலக்கெடு வழங்குமாறு நீதிபதிகளை கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு மறுத்த நீதிபதிகள், அது பதிவாளரைச் சார்ந்தது என பதிலளித்தனர்.

முன்னதாக தேசிய மற்றும் அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பலாம் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com