எஸ்.சி., எஸ்.டி., இனத்தவருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடா? - இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

எஸ்.சி., எஸ்.டி., இனத்தவருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான எம்.நாகராஜ் வழக்கில் 2006-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு ஒரு தீர்ப்பு வழங்கியது.
எஸ்.சி., எஸ்.டி., இனத்தவருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடா? - இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
Published on

புதுடெல்லி,

அந்த தீர்ப்பில், பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., இனத்தவருக்கு அரசு இடஒதுக்கீடு வழங்க வேண்டியது இல்லை; வழங்க வேண்டிய கட்டாய காரணங்கள் ஏற்பட்டால் 50 சதவீத உச்சவரம்பை அரசு மீறக்கூடாது, கிரீமிலேயரை அழித்து விடக்கூடாது; காலவரையற்று இடஒதுக்கீட்டை நீட்டிக்க கூடாது என கூறப்பட்டது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல தரப்பினரும் வழக்குகளை தாக்கல் செய்து உள்ளனர்.

இந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வின் முன் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நேற்று ஆஜராகி, ரெயில்வே உள்ளிட்ட துறைகளில் லட்சக்கணக்கான பணி நியமனங்கள் பல்வேறு தீர்ப்புகளின் காரணமாக ஏற்பட்டு உள்ள குழப்பத்தில் சிக்கி இருப்பதால், இந்த விவகாரத்தில் விரைவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் நீதிபதிகள், 2006-ம் ஆண்டு நாகராஜ் வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேவைப்படுகிறது என கூறியதுடன், இது தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com