

பரூச்,
குஜராத்தின் பரூச் நகரில் வடாடாலா பகுதியில் தனியார் பள்ளி கூடம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் ஒரு வாரம் வரையிலான கவுரி விரதம் கடைப்பிடிக்கும் பொழுது சிறுமிகள், இளம்பெண்கள் கைகளில் மெஹந்தி (மருதாணி வைப்பது) வரைவது வழக்கம்.
அந்த வகையில் பள்ளி கூடத்தின் மாணவிகள் தங்களது கைகளில் மெஹந்தி வரைந்துள்ளனர். இந்த விரதம் கடந்த 2 நாட்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. ஆனால் மெஹந்தி வரைந்து பள்ளிக்கு சென்ற மாணவிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவர்களது பள்ளியின் முதல்வர் கைகளில் மெஹந்தி வரைந்த 25 மாணவிகளை வகுப்பறைக்கு வெளியே 4 மணிநேரம் நிற்க வைத்து நேற்று தண்டனை வழங்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு இன்று சென்று நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர்.
இதுபற்றி அறிந்ததும் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. துஷ்யந்த் பட்டேல் பள்ளிக்கு சென்று நிர்வாகத்திடம் பேசினார். அதன்பின் பள்ளி நிர்வாகிகள் ஊடகம் மற்றும் பெற்றோர் முன் மன்னிப்பு கேட்டு கொண்டனர். இதுபோன்ற சம்பவம் இனி வருங்காலங்களில் நடைபெறாது என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.