

மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவகிறது.
மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 1, 2026 முதல் ஏப்ரல் 20 வரை வெப்பத்தாக்கத்தால் 39 நேரடி பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இதனுடன், மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தம் 109 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அக்கோலா, நந்துர்பார் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் அதிகப்படியான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மும்பை மாநகராட்சிப் பகுதியில் நேரடி வெப்பத்தாக்கங்கள் புதிதாக இல்லை என்றாலும், வெப்பம் தொடர்பான பிற உடல்நலக் குறைபாடுகளால் 108 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 3.34 லட்சத்திற்கும் அதிகமானோர் வெப்பம் தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்த அபாயகரமான நிலையை முன்னிட்டு, மாநில சுகாதாரத் துறை அனைத்து மாவட்ட மருத்துவமனைகளும் தயார்நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது. வெப்பத்தாக்க நோயாளிகளுக்கென தனிப்படுக்கைகள், போதுமான அளவு ஓஆர்எஸ் (ORS) பாக்கெட்டுகள் மற்றும் குளிர்ந்த குடிநீர் வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும், தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும், அதிகளவில் தண்ணீர் குடித்து உடல் நீர்ச்சத்தை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.