பாதுகாப்பு கவச உடை, முககவசம் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்வு: நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும்

பாதுகாப்பு கவச உடை மற்றும் முக கவசங்கள் எண்ணிக்கை தலா 3 லட்சமாக அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு கவச உடை, முககவசம் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்வு: நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும்
Published on

புதுடெல்லி,

நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்பு கவச உடை மற்றும் முக கவசங்கள் எண்ணிக்கை தலா 3 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாதுகாப்பு கவச உடைகளின் தரம் குறித்து சில ஊடகங்களில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்ட பாதுகாப்பு கவச உடைகள் தொடர்புடையவை அல்ல.

எச்.எல்.எல்.லைப்கேர் என்ற கொள்முதல் நிறுவனம்தான், ஆஸ்பத்திரிகளுக்கு பாதுகாப்பு கவச உடைகளை கொள்முதல் செய்கிறது. மத்திய ஜவுளி அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற 8 ஆய்வுக்கூடங்களில் ஏதேனும் ஒரு ஆய்வுக்கூடத்தால் பரிசோதித்து சான்றளிக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.

மேலும், மத்திய சுகாதார அமைச்சகம் அமைத்த தொழில்நுட்ப குழுவின் பரிசோதனையில் தேர்வு பெறும் தயாரிப்புகள் மட்டுமே வாங்கப்படுகின்றன. அத்துடன், எச்.எல்.எல்.லைப்கேர் நிறுவனமும் பரிசோதனை நடத்துகிறது. இதில் தவறு கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் தகுதி நீக்கம் செய்யப்படும். மாநில அரசுகளும் இத்தகைய நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மேலும், பாதுகாப்பு கவச உடைகள், என் 95 ரக முக கவசங்களின் உள்நாட்டு உற்பத்தியை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. அதன்மூலம் மாநில அரசுகளின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது, நாள் ஒன்றுக்கு தலா 3 லட்சம் பாதுகாப்பு கவச உடைகளும், என்95 முக கவசங்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com