

ராய்ப்பூர்,
சத்தீஸ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டம் பாதும் பகுதியில் நக்சலைட்டுகள் பேனர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சத்தீஸ்கார் ஆயுதப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அங்கு நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கிறார்களா என்பதை அறிய ரோந்து சென்றனர். அப்போது, ஒரு போலீஸ் ஏட்டு, நக்சலைட்டுகள் மறைத்து வைத்திருந்த 'பிரஷர்' குண்டில் தவறுதலாக கால் வைத்து விட்டார்.
அடுத்த நொடி, குண்டு வெடித்தது. இதில், ஏட்டு அதே இடத்தில் பலியானார். அவர் பெயர் சஞ்சய் லக்ரா. சத்தீஸ்காரின் ஜஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.