இந்திய விமானப்படையின் பயிற்சி தலைமை தளபதியாக சீதேபள்ளி ஸ்ரீனிவாஸ் பதவியேற்பு

ஏர் மார்ஷல் சீதேபள்ளி ஸ்ரீனிவாஸ் 2024-ம் ஆண்டு ஜனாதிபதியிடம் பதக்கம் பெற்றார்.
இந்திய விமானப்படையின் பயிற்சி தலைமை தளபதியாக சீதேபள்ளி ஸ்ரீனிவாஸ் பதவியேற்பு
Published on

சென்னை,

பெங்களூருவில் உள்ள இந்திய விமானப்படையின் பயிற்சி தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் சீதேபள்ளி ஸ்ரீனிவாஸ் இன்று பதவியேற்றார். புதிதாக பதவியேற்ற பின்னர், பயிற்சி மையத்தில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.

தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான ஏர் மார்ஷல் ஸ்ரீனிவாஸ், 1987-ம் ஆண்டு ஜூன் 13-ந்தேதி இந்திய விமானப்படையின் போர் பிரிவில் நியமிக்கப்பட்டார். அவர் MiG-21, இஸ்க்ரா, கிரண், PC-7 Mk II, HPT-32 மற்றும் மைக்ரோலைட் உள்ளிட்ட பிற விமானங்களில் 4,200 மணி நேரத்திற்கும் மேலான பறக்கும் அனுபவமுள்ள A வகை தகுதி பெற்ற பயிற்சியாளர் ஆவார்.

சேடக் / சீட்டா ஹெலிகாப்டரில் 2-வது விமானியாகவும், பெச்சோரா ஏவுகணை அமைப்பை இயக்கும் வகைப்படுத்தப்பட்ட செயல்பாட்டு அதிகாரியாகவும் அவர் தகுதி பெற்றுள்ளார். இதற்கு முன்பு விமானப்படை அகாடமியின் கமாண்டன்ட், மேற்கு எல்லையில் உள்ள ஒரு முன்னணி போர் விமான தளத்தின் விமான கமாண்டிங் அதிகாரி (AOC) மற்றும் அடிப்படை பறக்கும் பயிற்சி பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பதவிகளை ஸ்ரீனிவாஸ் வகித்துள்ளார்.

ஏர் மார்ஷல் சீதேபள்ளி ஸ்ரீனிவாஸ் தேசிய பாதுகாப்பு கல்லூரி, பாதுகாப்பு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் பட்டம் பெற்றவர் ஆவார். அவரது சிறப்பான சேவைகளை பாராட்டி, 2017-ம் ஆண்டில் அவருக்கு விஷிஷ்ட் சேவா பதக்கமும், 2024-ம் ஆண்டில் அதி விஷிஷ்ட் சேவா பதக்கமும் இந்திய ஜனாதிபதியால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com