அஜித் பவாருக்கு எதிரான வழக்குகளை கைவிட எதிர்ப்பு : சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

அஜித் பவாருக்கு எதிரான வழக்குகளை கைவிட எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளன.
அஜித் பவாருக்கு எதிரான வழக்குகளை கைவிட எதிர்ப்பு : சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு
Published on

மும்பை,

மராட்டியத்தில் முன்பு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, நீர்ப்பாசன துறையில் ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது, நீர்ப்பாசன துறை மந்திரியாக பதவி வகித்தவர் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார். தற்போது ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தொடர்ந்து, பாரதீய ஜனதா அரசு அமைய ஆதரவளித்த அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.

பதவியேற்று 2 நாட்கள் கூட ஆகாத நிலையில் மராட்டிய லஞ்ச ஒழிப்பு துறை, 2013-ம் ஆண்டு நடந்த நீர்ப்பாசன திட்டங்களில் ஊழல் நடந்ததாக கூறப்படும் 9 வழக்குகள் மீதான விசாரணையை முடித்து வைப்பதாக நேற்று அறிவித்தது. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவுக்கு உதவியதற்கு பிரதிபலனாக அஜித் பவார் மீதான இந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. பாரதீய ஜனதா அரசு பதவியேற்ற நாளில் இருந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு செய்த ஒரே நல்ல காரியம் ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகளை கைவிட்டது தான் என்றும் காங்கிரஸ் கிண்டல் செய்து இருக்கிறது.

இதற்கு மத்தியில், லஞ்ச ஒழிப்புத்துறையின் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முறையிட்டுள்ளன. 24 மணி நேரத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, எந்த கொள்கை முடிவையும் அரசு எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மூன்று கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com