71 பேரை பலி கொண்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள்; 4 பேருக்கு ஆயுள் தண்டனை

ராஜஸ்தானின் சிறப்பு கோர்ட்டு ஒன்று தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், 4 பேரை குற்றவாளிகள் என கடந்த 4-ந்தேதி தீர்ப்பளித்தது.
71 பேரை பலி கொண்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள்; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் 2008-ம் ஆண்டு மே 13-ந்தேதி 8 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. மற்றொரு வெடிகுண்டு ஒன்று சந்த்போல் பஜார் பகுதியருகே வெடிக்காத நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. அது பின்னர் செயலிழக்க செய்யப்பட்டது. மனக் சவுக் கந்தா, சந்த்போல் கேட், பாடி சவுபாத், சோட்டி சவுபாத், திரிபோலியா கேட், ஜோஹ்ரி பஜார் மற்றும் சங்கனேரி கேட் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன.

இந்த சம்பவத்தில், 71 பேர் பலியானார்கள். 180 பேர் காயமடைந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய தனியான வேறு வழக்குகளில், கடந்த 2019-ம் ஆண்டு கோர்ட்டு ஒன்று அஸ்மி, சைப், ரகுமான் மற்றும் முகமது சல்மான் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. எனினும், சந்தேகத்தின் பலனை அடிப்படையாக கொண்டு, ஷாபாஸ் என்ற குற்றவாளி விடுவிக்கப்பட்டார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதில், 2023-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி அவர்கள் விடுவிக்கப்பட்டதுடன், ஷாபாஸ் விடுவிப்பையும் உறுதி செய்தனர்.

இந்நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் உள்ள சிறப்பு கோர்ட்டு ஒன்று இந்த வழக்கை விசாரித்தது. ஐ.பி.சி.யின் பல்வேறு பிரிவுகளின் கீழ், சர்வார் அஸ்மி, ஷாபாஸ், சைபுர் ரகுமான் மற்றும் முகமது சைப் ஆகிய 4 பேரை குற்றவாளிகள் என கடந்த 4-ந்தேதி தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதன்படி, 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிராக நடந்த தாக்குதல் இது என கோர்ட்டு அப்போது தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com