

புதுடெல்லி,
உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, புனே விமான நிலையத்தில் சிறப்பு விமான இயக்கத்தை சீராக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள விமான நிலையம் இந்திய விமானப்படையால் இயக்கப்படும் ஒரு பாதுகாப்பு விமானப்படை தளமாகும். எனவே இங்கு வெளிநாட்டு பயணிகள், விமானிகள், ஊழியர்கள் சிறப்பு விமானங்களில் வந்து செல்வதற்கு சிறப்பு வழிமுறைகள் (ஏ.ஓ.ஆர்.) அவசியம் ஆகும்.
ஆனால் இந்த கொள்கையால் வெளிநாட்டு பயணிகள், விமானிகள், ஊழியர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்து செல்வதில் மிகுந்த இடையூறு ஏற்படுவதாக சீரம் நிறுவனம் கூறியுள்ளது. எனவே இந்த ஏ.ஓ.ஆர். கொள்கையில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை, குறிப்பாக உள்துறை மந்திரி அமித்ஷாவை அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டு உள்ளது.
வெளிநாட்டினர் சுமுகமாக வந்து செல்லவும், இந்தியாவில் அவர்கள் எளிதில் வணிகம் செய்யவும் இந்த நடவடிக்கை தேவை என உள்துறை மந்திரிக்கு இந்த நிறுவனம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளது.
கோவா விமான நிலையமும் இதைப்போல கடற்படையின் கீழ் இருந்தாலும், அங்கு இத்தகைய சிறப்பு வழிமுறை தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ள சீரம், அதைப்போல புனே விமான நிலையத்துக்கும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளது.