

புதுடெல்லி,
இந்தியாவில் அடுத்த வாரம் ஆக்ஸ்போர்டு நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிகாரிகள் கோரிய கூடுதல் தரவுகளை தடுப்பூசி நிறுவனம் அளித்துள்ளதாகவும் ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், அஸ்ட்ரா செனகா நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கும் முதல் நாடாக இருக்கும் என்பது குறிபிடத்தக்கது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா செனகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டு பிடித்துள்ளது. இதன் 3 கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இங்கிலாந்து, பிரான்ஸ் நாட்டில் இதன் சோதனைகள் நடத்தப்பட்டதில் முழு வெற்றியை பெற்றுள்ளது. இது 90 சதவீதம் சிறப்பாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்கு புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் மருந்து நிறுவனம் அனுமதி பெற்றிருந்தது. மேலும் மருந்தின் 2-வது, 3-வது கட்ட சோதனைகளை இந்தியாவில் நடத்துவதற்கும் அனுமதி பெற்றது. அதன்படி 2-வது கட்ட சோதனை முடிந்து 3-வது கட்ட சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்து, பிரேசிலில் சோதனை வெற்றிகரமாக அமைந்ததால் இங்கிலாந்தில் எந்த நேரத்திலும் இந்த மருந்துக்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இந்தியாவிலும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று சீரம் நிறுவனம் மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அனுமதி கேட்டு இருந்தது.
பெரும்பாலும் அடுத்த வாரத்துக்குள் அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக மருந்து நிறுவனம் கூறி இருக்கிறது. அவசர பயன்பாட்டுக்கு மட்டும் முதலில் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்படும். இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மருந்துக்கு கோவிஷீல்டு என்று பெயரிட்டுள்ளனர்.