

சாலிகிராமம்
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அணைகள் தண்ணீர் குறைவாக உள்ளது. அத்துடன் மாநிலத்தில் கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் 195 தாலுகாக்களை வறட்சி பகுதிகளாக மாநில அரசு அறிவித்துள்ளது.
அதிலும், முதல்-மந்திரி சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூருவில் சில தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. அதில் சாலிகிராமம் தாலுகாவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மழை இன்மை, தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் கருகி வருகின்றன.
சாலிகிராமம் தாலுகாவில் சன்னங்கெரே, மைகவுடனஹள்ளி, சுஞ்சனகட்டே, ஸ்ரீராமபுர், அங்கனஹள்ளி, லட்சுமிபூர், சிக்கநாயக்கனஹள்ளி, நாதனஹள்ளி ஆகிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவல் நெல் பயிரிடப்பட்டது. காவிரி ஆற்று படுகையில் உள்ள இந்த கிராமங்களில் காவிரி நீரை நம்பி தான் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மழை பற்றாக்குறை காரணமாக காவிரியில் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் சாலிகிராமம் தாலுகாவில் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன.
இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் வேதனையில் உள்ளனர். மேலும், தங்களுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.