3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை; குற்றவாளியிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலித்து மதுவிருந்து நடத்திய கிராமத்தினர்

கிராம பஞ்சாயத்தில் குற்றவாளிக்கு அபராதம் விதித்து பிரச்சினையை இங்கேயே தீர்த்துவிடலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர்.
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை; குற்றவாளியிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலித்து மதுவிருந்து நடத்திய கிராமத்தினர்
Published on

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சுனில் லோஹ்ரா என்ற வாலிபர், கடந்த சனிக்கிழமை மாலை தனது உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த வீட்டில் இருந்த 3 வயது குழந்தையை பார்த்த சுனில் லோஹ்ரா, குழந்தையின் தாயிடம் அனுமதி பெற்று குழந்தையை வெளியே அழைத்துச் செல்வதாக கூட்டிச் சென்றுள்ளார்.

பின்னர் அந்த குழந்தையை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அந்த குழந்தை தனது தாயிடம் கூறிய நிலையில், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல், கிராம பஞ்சாயத்தை கூட்டி நியாயம் கேட்டுள்ளனர். ஆனால் பஞ்சாயத்தை சேர்ந்த சில நபர்கள், இந்த விவகாரத்தை காவல்துறை வரை கொண்டு செல்ல வேண்டாம் என்றும், குற்றவாளிக்கு அபராதம் விதித்து பிரச்சினையை இங்கேயே தீர்த்துவிடலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளனர்.

இதனை கிராம பஞ்சாயத்து ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதன்படி குற்றவாளி சுனில் லோஹ்ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையில் ரூ.20,000 பணத்தை உடனடியாக செலுத்திய சுனில் லோஹ்ரா, மீதம் உள்ள பணத்தை ஒரு வாரத்திற்குள் கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். அவர் கொடுத்த ரூ.20,000 பணத்தில் கிராமத்தினர் சிலர் மதுபானங்களையும், அசைவ உணவுகளையும் வாங்கி வந்து விருந்து வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கிராம பஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை அறிந்து போலீசார் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு மது விருந்து படுஜோராக நடந்து கொண்டிருந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாரிடம் நேரடியாக புகாரைப் பெற்ற போலீசார், அந்த புகாரின் அடிப்படையில் சுனில் லோஹரை கைது செய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com