

புதுடெல்லி,
செசல்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர் பேட்ரிக் ஹெர்மைனி. குடியரசு நாடான செசல்ஸில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று கடந்த ஆண்டு அக்டோபரில் ஜனாதிபதியாக பேட்ரிக் பதவியேற்று கொண்டார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, இந்தியாவுக்கு அவர் வருகை தரவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வருகிற 5-ந்தேதி இந்தியா வருகை தரும் அவர் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசுகிறார்.
ஜனாதிபதியான பின்னர் முதன்முறையாக இந்தியாவுக்கு மேற்கொள்ளும் பயணம் இதுவாகும். இதில், பிரதமர் மோடியுடன் இருதரப்பு, மண்டல மற்றும் பரஸ்பர நலன்களுக்கான சர்வதேச விவகாரங்கள் ஆகியவை பற்றி ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தின்போது சென்னை, மும்பை நகரங்களுக்கும் செல்லும் அவர் வர்த்தகம் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார். 1976-ம் ஆண்டு செசல்ஸ் நாடு சுதந்திரமடைந்த பின்னர் இந்தியாவுடன் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.