

புதுடெல்லி,
ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ். இவர் டெல்லி மேல்-சபை எம்.பி.யாக இருந்தார். பீகாரில் பா.ஜனதாவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நிதிஷ்குமார் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார்.
இதற்கு சரத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கட்சி பொறுப்பு, சின்னம் ஆகியவற்றை பெறுவதில் சரத் யாதவுக்கும், நிதிஷ்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதிக பெரும்பான்மை உள்ளதால் நிதிஷ்குமாருக்கு கட்சியின் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் சரத் யாதவ், அவருடைய ஆதரவாளரான மற்றொரு மேல்-சபை எம்.பி. அலி அன்வர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமை மேல்-சபை தலைவரும், துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து சரத் யாதவ், அலி அன்வர் ஆகியோரின் டெல்லி மேல்-சபை எம்.பி. பதவி நேற்று முன்தினம் பறிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சரத் யாதவின் பதவிக்காலம் 2022-ம் ஆண்டும், அலி அன்வரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டும் நிறைவடைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி பறிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த சரத் யாதவ், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து இருப்பதாகவும், மக்களின் உரிமைக்கான தனது போராட்டம் தொடரும் என்று கூறினர்.