வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு சசிதரூர் எம்.பி. ஆதரவு

பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைமை மற்றும் எதிர்க்கட்சியினர் போராடி வருகின்றனர்.
புதுடெல்லி
கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், சமீபகாலமாக பிரதமர் மோடியைப் பாராட்டி வருகிறார். இதனால் காங்கிரஸ் தலைமை அவரை கண்டித்து வந்தது.இந்த நிலையில், பீகார் வாக்காளர் பட்டியலில் தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ள சிறப்பு தீவிர திருத்தத்துக்கு சசிதரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நல்ல முடிவாகும். ஆண்டு தோறும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது அவசியம். போலிகள், இறந்தவர்கள் மற்றும் பதிவு செய்யப்படாதவர்களின் விவரத்தை இதன் மூலம் கண்டறிய முடியும். தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தை வெளிப்படையாக கையாள வேண்டும். முறை கேடுகளை கண்டறிய டிஜிட்டல் கருவிகள் உள்ளிட்ட வழிமுறைகளை பயன்படுத்த வேண்டும்,” என்றார்.
பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைமை மற்றும் எதிர்க்கட்சியினர் போராடி வருகின்றனர். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.இந்த விவகாரத்தில் சசிதரூர் அரசுக்கு ஆதரவாக தெரிவித்துள்ள நிலைப்பாடு, இந்தியா கூட்டணியின் முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.






