

பாட்னா,
30 வருடங்களாக பா.ஜனதாவில் இருந்துவந்த சத்ருகன் சின்ஹா, பீகார் மாநிலத்தில் உள்ள பட்னா சாகிப் தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றிபெற்று எம்.பி.யாக இருந்தார். இதற்கிடையே அவருக்கும், கட்சி தலைமைக்கும் இடையே திடீர் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. பிரதமர் மோடி, அமித்ஷாவை பல்வேறு விவகாரங்களில் கடுமையாக விமர்சனம் செய்தார். கொல்கத்தாவில் நடந்த எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார். ஹோலி பண்டிகையின் போதும் பிரதமர் மோடி தன்னைத்தானே காவலாளி என கூறியதையும் விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கவில்லை. பட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளார். பீகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் பேசுகையில், சத்ருகன் சின்ஹா வியாழக்கிழமை டெல்லியில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார். அவர் பட்னா சாகிப் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார்என கூறியுள்ளார்.
பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேரும்போதெல்லாம் பட்னா சாகிப் தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிட்டுள்ளது. எனவே சின்ஹா காங்கிரஸ் வேட்பாளராகவே போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.