சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் கப்பல் கடத்தல்..! மீட்பு நடவடிக்கையில் இந்திய கடற்படையினர் தீவிரம்

கடத்தப்பட்ட கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் கப்பல் கடத்தல்..! மீட்பு நடவடிக்கையில் இந்திய கடற்படையினர் தீவிரம்
Published on

புதுடெல்லி,

ஆப்பிரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்களுடன் வணிக கப்பல் (எம்வி லிலா நார்போல்க்) கடத்தப்பட்டுள்ளது.  கப்பல் கடத்தல் குறித்த தகவல் கிடைத்ததும் இந்திய கடற்படையினர் மீட்பு நடவடிக்கையில்  ஈடுபட்டுள்ளனர். இந்த கப்பலில் லைபீரியாவின் கொடி இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடத்தப்பட்ட கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும்  இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சென்னை, கடத்தப்பட்ட கப்பலை நோக்கி நிலைமையை சமாளிக்க நகர்ந்து வருவதாகவும் இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியக் கடற்படையின் கடல்சார் ரோந்து விமானம், கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளது. அப்பகுதியில் உள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த நிலைமையும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. நட்பு நாடுகளுடன் இணைந்து இப்பகுதியில் வணிகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடற்படை உறுதியாக உள்ளது என்றும் இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com