

மும்பை
கொரோனா தொற்றால் 40 நாட்களாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் நாடு முழுவதும் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன.
ஆந்திரா, தெலுங்கானா,மராட்டியம்,கர்நாடகா, டெல்லி, அசாம் உள்பட பல மாநிலங்களில் மதுக் கடைகளில் கடந்த சில நாட்களாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. காலை முதலே மது பிரியர்கள் வரிசையில் காத்து நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் பல இடங்களில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல், அடித்து பிடித்துக்கொண்டு மக்கள் மதுவை வாங்கிச் செல்கின்றனர். இதனால் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் எழுந்து வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களாக கொரோனாவை விஞ்சி அதிகம் பேசப்படும் விஷயமாகியிருப்பது மதுபானக் கடையில் காணப்படும் கூட்டம்தான். கூட்டம் என்றால் வெறும் கூட்டமல்ல.. கட்டுக்கடங்காத கூட்டம்
இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் ஆன் லைனில், மறைமுகமாக மதுபான விற்பனையை நடத்த பரிசீலிக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
இந்த நிலையில் மதுபானக்கடைகளில் கூடும் கூட்டம் குறித்து சிவசேனா மத்திய அரசை குற்றம்சாட்டி உள்ளது.
சிவசேனா மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
இறுதிச் சடங்கிற்கு 20 பேர் மட்டுமே கூடுவற்கு அனுமதி அளித்துள்ளனர் - ஏனென்றால் ஆன்மா(spirit) ஏற்கனவே உடலை விட்டு வெளியேறிவிட்டது. 1000 பேர் ஒரு மதுபான கடைக்கு அருகில் கூடுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள், ஏனெனில் அங்கு தான் ஆன்மாக்கள் (spirits) உள்ளன என கூறி உள்ளார்.