காஷ்மீர் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை, வீரர்கள் கொல்லப்படுவதும் நிற்கவில்லை: மோடியை சாடிய சிவசேனா

காஷ்மீர் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை, வீரர்கள் கொல்லப்படுவதும் நிற்கவில்லை என மோடியை சிவசேனா சாடியுள்ளது.
காஷ்மீர் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை, வீரர்கள் கொல்லப்படுவதும் நிற்கவில்லை: மோடியை சாடிய சிவசேனா
Published on

மும்பை,

புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய கொடூரத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ள சிவசேனா, தேசம் கோப அலைகளையும், அரசியல் வெற்றிகளையும் பார்த்து வருகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதும் தடுக்கப்படவில்லை என கூறியுள்ளது.

பாகிஸ்தானுக்குள் இந்திய ராணுவ வீரர்கள் சென்று துல்லிய தாக்குதல் நடத்தியதை குறிப்பிட்டு சிவசேனா இவ்விமர்சனைத்தை முன்வைத்துள்ளது.

உண்மையான துல்லிய தாக்குதல் என்றால் என்ன என்பதை நாம் உணர வேண்டும். பாகிஸ்தானுக்குள் சென்று ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றதை தான் துல்லிய தாக்குதல் என்று கூறலாம். அரசியல் எதிரிகள் மீது துல்லிய தாக்குதலை நடத்த வேண்டிய நேரம் இது கிடையாது. பாகிஸ்தானுக்கு எதிராக துல்லிய தாக்குதலை நடத்த வேண்டிய நேரமாகும். நம்முடைய ராணுவ வீரர்கள் உயிரிழப்பிற்கு பழி வாங்க வேண்டும். பிரதமர் மோடி பழி வாங்குவோம் என பேசி வருகிறார், அதனை செயலில் காட்ட வேண்டும். இது அரசியல் செய்யும் நேரம் கிடையாது, நம்முடைய வீரர்களுக்கு பின்னால் உறுதியாக நிற்கவேண்டிய நேரமாகும் என சிவசேனா கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com