கேரளாவில் அதிர்ச்சி: முதியவர் கொலை வழக்கில் 13 வயது சிறுமி, 3 சிறுவர்கள் கைது

பணத்தேவைக்காக முதியவர் சிவன்குட்டியை கொலை செய்ததாக போலீசாரிடம் கைதான சிறுவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கேரளாவில் அதிர்ச்சி: முதியவர் கொலை வழக்கில் 13 வயது சிறுமி, 3 சிறுவர்கள் கைது
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழாவில் 67 வயதான சிவன்குட்டி என்ற முதியவர், கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ஒரு துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம் உள்ளிட்டவை காணாமல் போயிருந்ததால், இந்த வழக்கை கொலை மற்றும் கொள்ளை வழக்காக கருதி போலீசார் விசாரணையை தொடங்கினர்.

ஆனால் விசாரணையின்போது, சிவன்குட்டியின் உறவினரான 13 வயது சிறுமி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தனது காதலனான 17 வயது சிறுவன் மற்றும் அவனது நண்பர்களான 17 வயது சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேர் சேர்ந்து சிவன்குட்டியை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ஐபோன் மற்றும் பைக் வாங்குவதற்கான பணத்தேவைக்காக முதியவர் சிவன்குட்டியை கொலை செய்ததாக போலீசாரிடம் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். சிறுமியின் காதலன் மற்றும் அவனது நண்பர்கள் ஆகிய மூவரும் இணைந்து கொலையை செய்ததாகவும், சிறுமி காணொலி அழைப்பில் இருந்தபடி சம்பவத்தை ஒருங்கிணைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com