

மீரட்
உத்தர பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் சாதர் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா பிஸ்வாஸ் (வயது 35). ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய 75 வயது தந்தை உதய் பான் பிஸ்வாஸ், ஓய்வு பெற்ற கிளார்க் ஆவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரியங்கா மரணம் அடைந்து விட்டார்.
ஆனால், இதுபற்றி யாருக்கும் தெரிவிக்காமல் அந்த உடலுடனேயே கடந்த 4 மாதங்களாக உதய் வசித்து வந்துள்ளார். வாடை எதுவும் அடிக்காமல் இருப்பதற்காக, உடலில் பெர்ப்யூம் (நறுமண பூச்சு) அடித்து வந்திருக்கிறார். இதில், உடல் எலும்பு கூடாகி விட்டது. அவருடைய உறவினர்கள் உதயை தேடி சென்ற இடத்தில் அவர் பெகாபாக் என்ற பகுதியில் இருந்தது தெரிய வந்தது.
அவரை வீட்டுக்கு அழைத்து வந்தபோது, நடந்த சம்பவம் பற்றி அறிந்து திடுக்கிட்டனர். கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு வகையான மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு பிரியங்கா மரணம் அடைந்து உள்ளார். ஆனால், மகளின் உடலுக்கு இறுதி சடங்குகள் எதுவும் செய்யாமல் வீட்டின் படுக்கையிலேயே வைத்து பாதுகாத்து வந்திருக்கிறார்.
இதுபற்றிய தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார், உதயை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.