

அமராவதி,
ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த வீரராஜு (வயது 46) அவரது மனைவி வீர சைலஜா (38) மற்றும் இவர்களது மகன் யஷ்வந்த் (16) சமீபத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். அவரை ஐதராபாத்தில் பிளஸ்-1 படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணிய பெற்றோர். அதற்கான பள்ளிகளை நேரில் பார்ப்பதற்காக மகனுடன் காரில் சென்றனர்.
கம்மம் மாவட்டம் கொனிஜர்லா அருகே சாகர் கால்வாய் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி அவர்கள் கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் சக்கரம் கார் மீது ஏறியதால் கார் முழுவதும் நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஒட்டிய வீரராஜு காரின் முன்பகுதியில் சிக்கிக் கொண்டார். சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த யஷ்வந்த் ‘என் பெற்றோரை காப்பாற்றுங்கள்’ என்று கதறி அழுதது அங்கு இருந்தவர்களை உருக வைத்தது.
அருகே இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வீரராஜு மற்றும் வீரசைலஜா ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். யஷ்வந்த்க்கு தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.