சந்திரசேகர ராவ் அரசை புகழ்ந்த மந்திரியின் கார் மீது காலணி, நாற்காலி வீச்சு

சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசை புகழ்ந்த மந்திரியின் கார் மீது காலணிகள் மற்றும் நாற்காலிகள் வீசப்பட்டன.
சந்திரசேகர ராவ் அரசை புகழ்ந்த மந்திரியின் கார் மீது காலணி, நாற்காலி வீச்சு
Published on

மேச்சல்,

தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் மந்திரி மல்லா ரெட்டி மேச்சல் மாவட்டத்தில் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றார். கூட்டத்தில் அவர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசை புகழ்ந்து பேசியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த கூட்டத்தில் இருந்த சிலர் ரகளையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தனது பேச்சை முடித்து கொண்ட மல்லா ரெட்டி கூட்டத்தில் இருந்து வெளியேறி தனது காரில் புறப்பட்டார்.

எனினும், கூடியிருந்த கும்பல் அவரது காரை நோக்கி காலணிகளையும், நாற்காலிகளையும், தண்ணீர் பாட்டில்களையும் வீசி எறிந்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மந்திரியின் பாதுகாப்பிற்காக வந்த போலீசார் அவருடைய காரை சூழ்ந்து கொண்டு பாதுகாப்பு அளித்து, அந்த பகுதியை விட்டு அவர் வெளியேற உதவினர். தொண்டர்களும் சிறிது தூரம் காரை பின்தொடர்ந்து ஓடினர்.

இதுபற்றி பா.ஜ.க. தேசிய ஐ.டி. துறை பொறுப்பு வகிக்கும் அமித் மாளவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சந்திரசேகர ராவின் தெலுங்கானா அரசின் புகழ் இதுபோன்று உள்ளது.

கத்கேசரில் நடந்த ரெட்டி மகா சபை கூட்டத்தில் மந்திரி மல்லா ரெட்டிக்கு எதிரான கோஷங்கள் எழுந்துள்ளன. தெலுங்கானா அரசை புகழ்ந்த மந்திரியின் பேச்சுக்கு எதிராக சிலர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இறுதியில் போலீசார் வந்து அவரை பாதுகாப்புடன் வெளியேற செய்துள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com