

புதுடெல்லி,
சமூகவலைதளங்களின் வளர்ச்சி இன்று பெரிய அளவில் சென்று கொண் டிருக்கிறது.
பெரும்பாலானோர் இதிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேறு தற்போது அனைத்தையும் ஆட்கொண்டுள்ளது. இதில் நன்மை தரும் விஷயங்கள் பல இருந்தாலும், ஆபத்தான அம்சங்களும் அதிகம் உள்ளன.
தீங்கு விளைவிக்கும் இந்த விஷயங்களில் சிறார்கள் சிலநேரங்களில் சிக்கி விடுகிறார்கள். இது கவலை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. உலகம் முழுவதும் இதுதான் நிலை. இதுபற்றி ஆராய்ந்த ஆஸ்திரேலியா நாடு, தங்களது நாட்டில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூகவலைதளங்களை பார்க்க முடியாதபடி தடை செய்துள்ளது.
சமூகவலைதளங்களை அவர்கள் அணுக வேண்டுமென்றால் பெற்றோர் சம்மதம் உள்ளிட்ட சில நிபந்தனைகளை ஆன்லைன் பதிவுகள் கேட்கின்றன. இதனால் சமூகவலைத்தளங்கள் அங்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுபோன்ற நடவடிக்கையை தங்களது நாடுகளிலும் எடுக்கலாமா? என பல்வேறு நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவை பின்பற்றி இங்கிலாந்து இதனை அமல்படுத்த கருத்துகளை கேட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவிலும் அதுபோன்ற தடை நடவடிக்கையை கொண்டு வரலாமா? என மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இதனை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "வயது அடிப்படையிலான கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பது பல நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் ஒரு பகுதியாகும். தற்போது, பல்வேறு சமூக வலைதளங்களுடன் 'டீப் பேக்'குகள் மற்றும் வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள் குறித்து நாங்கள் பேசி வருகிறோம். இது நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஒரு பிரச்சினை. இந்த பாதிப்புகளில் இருந்து நமது குழந்தைகளையும், சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் நிச்சயமாக உள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.