மெட்டா மொழி பெயர்ப்பால் சர்ச்சை: கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா காலமானதாக கூறியதால் அதிர்ச்சி

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா காலமானார் என்ற மெட்டாவின் தானியங்கி மொழி பெயர்ப்பால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜாதேவிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அஞ்சலி செலுத்தியது தொடர்பான பதிவு கர்நாடக முதல்-மந்திரி அலுவலகத்தின் அதிகாரபூர்வ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. கன்னடத்தில் வெளியிடப்பட்ட இந்த பதிவை ஆங்கிலத்தில் மெட்டா நிறுவனத்தின் தானியங்கு மொழிபெயர்ப்பு அம்சம் "கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா காலமானார்" என்று மொழிபெயர்த்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, "மெட்டா தளங்களில் கன்னட உள்ளடக்கத்தை மொழிபெயர்த்த தானியங்கி மொழிபெயர்ப்பு, உண்மைகளைத் திரித்து பயனர்களை தவறாக வழிநடத்துகிறது. இதை உடனடியாக திருத்தம் செய்ய வலியுறுத்தி எனது ஊடக ஆலோசகர் மெட்டாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். சமூக ஊடக தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் தவறானவை என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் எச்சரிக்கிறேன். தொழில்நுட்ப ஜாம்பவான்களின் இத்தகைய அலட்சியம் பொதுமக்களின் புரிதலுக்கும், நம்பிக்கைக்கும் தீங்கு விளைவிக்கும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அந்த பதிவின் ஆங்கில மொழிபெயர்ப்பு சரியாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






