

பெங்களூரு
கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவியேற்றனர். அப்போது, முதல்-மந்திரி அதிகார பகிர்வு தொடர்பாக பரபரப்பான தகவல் வெளியானது. இதன்படி, இரண்டரை வருட காலம் சித்தராமையாவும், மற்றொரு இரண்டரை வருட காலத்தில் டி.கே. சிவக்குமாரும் முதல்-மந்திரி பதவியை வகிப்பார்கள் என தகவல் கசிந்தது.
இதனால், கடந்த ஆண்டு நவம்பரில் ஆட்சியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்களும் அதனை ஆவலாக எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், அதிகார மாற்றம் எதுவும் காணப்படவில்லை. அவ்வப்போது செய்தியாளர்கள் சித்தராமையாவிடமும், டி.கே. சிவக்குமாரிடமும் முதல்-மந்திரி பதவி பற்றி கேள்வி எழுப்பி வந்தனர்.
அப்போது எல்லாம், இருவரும் அதிகாரப்பூர்வ தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை. எனினும், முதல்-மந்திரி சித்தராமையா கூறும்போது, இந்த விவகாரத்தில், கட்சி மேலிட கட்டளைக்கு நானும், சிவக்குமாரும் கட்டுப்படுவோம் என்றார்.
இந்த சூழலில், துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாருக்கு வழிவிடுவதற்காக முதல்-மந்திரி பதவியை சித்தராமையா ராஜினாமா செய்கிறார் என நேற்று தகவல் வெளியானது. இதுபற்றி அக்கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவரான ஆர்.வி. தேஷ்பாண்டே கூறும்போது, ராஜினாமா செய்வது என முடிவு செய்து விட்டேன் என்று சித்தராமையா என்னிடம் கூறினார்.
நீங்களே ஏன் பதவியில் தொடர கூடாது? என வற்புறுத்த முயற்சித்தேன். ஆனால் அவரோ, கட்சியின் மேலிடத்திற்கு நான் வாக்கு கொடுத்து விட்டேன். அதனை நான் மதிக்க வேண்டும் என்றார். இதனால், நாளை அல்லது நாளை மறுநாள் அவர் ராஜினாமா செய்வார் என்று தேஷ்பாண்டே கூறினார்.
இதன்படி, கர்நாடக முதல்-அமைச்சர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் மேலிட உத்தரவை ஏற்று டி.கே. சிவக்குமார் உடன் பெங்களூருவில் உள்ள மக்கள் மாளிகைக்கு சித்தராமையா சென்றார். எனினும், கவர்னர் இல்லாத சூழலில், அவருடைய செயலரிடம் ராஜினாமா கடிதம் வழங்கினார். இதனை தொடர்ந்து, டி.கே. சிவக்குமார் நாளை முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மாநில முதல்-அமைச்சராக சித்தராமையா பதவி வகித்து இருக்கிறார். கர்நாடகாவின் நீண்ட கால முதல்-அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர் ஆவார்.