தேவேகவுடாவுடன் சித்தராமையா திடீர் சந்திப்பு

பெங்களூரு விமான நிலையத்தில் தேவேகவுடாவை சந்தித்த சித்தராமையா அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
தேவேகவுடாவுடன் சித்தராமையா திடீர் சந்திப்பு
Published on

பெங்களூரு:-

டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று இரவு பெங்களூருவில் இருந்து முதல்-மந்திரி சித்தராமையா விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் சென்றார். அப்போது மங்களூருவுக்கு செல்வதற்காக முன்னாள் பிரதமரும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா தனது மனைவி சென்னம்மாவுடன் காத்திருந்தார். தன்னுடைய அரசியல் குருவான தேவேகவுடாவை எதிர்பாராத விதமாக சந்தித்ததும், முதல்-மந்திரி சித்தராமையா அருகில் சென்றார்.

பின்னர் தேவேகவுடாவை சித்தராமையா சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பரஸ்பரம் உடல் நலம் குறித்து விசாரித்து கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தில் தனக்கு கால் வலி மட்டும் இருப்பதாக தேவேகவுடா தெரிவித்தார். உடனே உடல் நலத்தை நன்கு கவனித்து கொள்ளும்படி தேவேகவுடாவிடம் சித்தராமையா கூறினார். பின்னர் சில நிமிடங்கள் 2 பேரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். அதன்பிறகு, முதல்-மந்திரி சித்தராமையா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பா.ஜனதாவுடன், ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அமைத்திருப்பதால், அதனை விமர்சித்து சித்தராமையா பேசி வரும் நிலையில், தேவேகவுடான திடீரென்று சந்தித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com