ராணுவ தலைமை தளபதியை கட்டி தழுவிய விவகாரம்; சித்துவுக்கு பா.ஜ.க. தலைவர் சத்ருகன் சின்கா ஆதரவு

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியை கட்டி தழுவிய விவகாரத்தில் சித்துவுக்கு பா.ஜ.க. தலைவர் சத்ருகன் சின்கா ஆதரவு தெரிவித்துள்ளார்.
ராணுவ தலைமை தளபதியை கட்டி தழுவிய விவகாரம்; சித்துவுக்கு பா.ஜ.க. தலைவர் சத்ருகன் சின்கா ஆதரவு
Published on

கொல்கத்தா,

பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்று கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்துவுக்கு அழைப்பு விடப்பட்டது. இதனை ஏற்று அவர் நேரில் கலந்து கொண்டு, இம்ரான்கானை வாழ்த்தினார்.

விழாவில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்த சித்துவை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா வரவேற்று கட்டித்தழுவியதுடன் அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

இந்த சம்பவத்திற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சித்துவுக்கு எதிராக அவரது கட்சியில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. நமது ராணுவ வீரர்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகின்றனர் என பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் கூறினார்.

நாடு திரும்பிய சித்து, எல்லை பகுதியில் சீக்கிய யாத்ரீகர்கள் செல்வதற்கு வழிவகை செய்யப்படும் என என்னிடம் கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில் அந்த சம்பவம் நடந்தது என தனது தரப்பு விளக்கத்தினை கூறினார்.

இந்த விவகாரத்தில் சித்துவுக்கு ஆதரவாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நடிகரான சத்ருகன் சின்கா பேசியுள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நமது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது பாகிஸ்தான் பயணத்தின்பொழுது அந்நாட்டு பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை கட்டி தழுவினார். நமது பிரதமர் மோடி அவர்களும் தனது பாகிஸ்தான் பயணத்தின்பொழுது அந்நாட்டு பிரதமர் ஷெரீப்பை கட்டி அணைத்துள்ளார்.

இதனை நான் முன்பே கூறியிருந்தேன். சித்துவும் இந்த விவகாரத்தில் தனது தரப்பு விளக்கத்தினை தெளிவுடன் கூறிவிட்டார். அதனால் இந்த விவகாரம் இத்துடன் முடிந்து போய் விட்டது என கூறினார்.

பஞ்சாபில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த வருடம் ஜனவரியில் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சித்து தன்னை இணைத்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com