குஜராத்தி பாடகருக்கு வீட்டிலேயே கொரோனா தடுப்பூசி? சர்ச்சை வெடித்ததால் விசாரணைக்கு உத்தரவு

பிரபல குஜராத்தி நாட்டுப்புற பாடகர் கீதா ரபாரி. 25 வயதாகும் இவர் குஜராத்திலும், வெளிநாடுகளிலும் நேரடி இசை நிகழ்ச்சிகள் நடத்தி புகழ்பெற்றவர்.
குஜராத்தி பாடகருக்கு வீட்டிலேயே கொரோனா தடுப்பூசி? சர்ச்சை வெடித்ததால் விசாரணைக்கு உத்தரவு
Published on

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் இந்தியா வந்திருந்தபோதும் ஆமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் கீதா ரபாரியின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. குஜராத் கட்ச் மாவட்டத்தில் உள்ள மாதாபார் கிராமத்தில் பாடகர் கீதா ரபாரியின் வீடு உள்ளது. இந்த வீட்டில் சோபாவில் அமர்ந்தபடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஒரு படத்தை சமூக ஊடகத்தில் கீதா ரபாரி பகிர்ந்தார்.

பொதுவாக தடுப்பூசி போட்டுக்கொள்வோர் ஆன்லைனில் பதிவு செய்தபிறகு, குறிப்பிட்ட மையத்துக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் கீதா ரபாரி கடந்த சனிக்கிழமையன்று ஆன்லைனில் பதிவு செய்தபோதும், வீட்டிலேயே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கீதா ரபாரி பிரபலமானவர் என்பதால் அவருக்கு இந்த சலுகையா என்ற சர்ச்சை வெடித்தது. அவர் மீது மாவட்ட நிர்வாகத்தில் புகாரும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்த இதுதொடர்பான படத்தை கீதா ரபாரி நீக்கிவிட்டார். ஆனாலும் இந்த விஷயம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், கீதா ரபாரிக்கு தடுப்பூசி போட்ட பெண் சுகாதார ஊழியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும், அவரது பதிலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com