

புதுடெல்லி,
ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி நேற்று முன் தினம் ஸ்லோவாக்கியா நாட்டின் பிரடிஸ்லவா நகருக்கு சென்றடைந்தார். அந்த நாட்டுக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை ஆகும். சுலோவாகியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவை விரிவான கூட்டாண்மை என்ற அந்தஸ்துக்கு தரம் உயர்த்த இருவரும் ஒப்புக்கொண்டனர். இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில், இந்தியா-ஸ்லோவாக்கியா இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், அந்நாட்டு அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 33-வது சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
நமது நாட்டிற்கு ஒரு பெருமைக்குரிய தருணம். ஸ்லோவாக்கியாவின் உயரிய குடிமை விருதான, முதல் வகுப்பு வெண் இரட்டைச் சிலுவை விருதை, பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த 33வது சர்வதேச கௌரவம், பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் மாற்றத்தை உருவாக்கும் திறனுக்கு ஓர் சான்றாக விளங்குகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.