

சமீபத்தில் மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள் கசிந்ததால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கிய இவர்களது போராட்டம் இன்று 26-வது நாளாக தொடர்ந்தது. இதற்கிடையே இந்த போராட்டத்துக்கு ஆதரவாக லடாக் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த மாத இறுதியில் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் 19-வது நாளை எட்டியது. அவரது உடல் எடை 9 கிலோ குறைந்துள்ளது. நீண்டகால உண்ணாவிரதத்தால் அவர் ஆபத்தான கட்டத்தை எட்டி உள்ளதாகவும், இது அவரது உடல் உறுப்புகளை பாதிக்கக்கூடும் என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் அவர் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என கெஜ்ரிவால், டிம்பிள் யாதவ் ஆகியோர் நேரில் வலியுறுத்தினர்.
இதுகுறித்து சோனம் வாங்சுக் கூறும்போது, "உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வது தவறான செய்தியை அளிக்கும். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு தன்னை வற்புறுத்துவதற்கு பதிலாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நாளான 20-ந்தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி திட்டமிட்டுள்ள நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை வலுப்படுத்த வேண்டும். மாணவர்கள் இதனை அரசியல் அறிவியல் மற்றும் ஜனநாயகத்தின் ஒரு உண்மையான பாடம் போல கருத வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.இதற்கிடையில் டெல்லி ஐகோர்ட்டில் சோனம் வாங்சுக் உடல்நிலை குறித்த கவலையை வெளிப்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "ஒவ்வொரு தனிநபரின் உயிரும் விலைமதிப்பற்றது என்றும், சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை தொடர்ந்து பரிசோதிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டு வெளியிட்ட உத்தரவில், "எந்தவொரு குடிமகனின் உயிரும் விலைமதிப்பற்றது என்பதையும், அதை காக்க அரசு அதிகாரிகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். சொலிசிட்டர் ஜெனரல் எடுத்துள்ள நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். வாங்சுக்கின் உடல்நிலை நாள்தோறும் கண்காணிக்கப்பட வேண்டும். தேவைப்படும் மருத்துவ உதவி மேற்கொள்ளப்பட வேண்டும்" என கூறியது.