சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 மணிநேரம் நடை சாத்தப்படுகிறது

சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 மணிநேரம் நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருமலை,

வருகிற 25-ந் தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ந் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இதனால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் பிற ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல் அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதனால் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமைப்பதில்லை.

அதன்படி திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவனில், வைகுந்தம் கியூ வளாகத்தில் அன்னபிரசாதம் வழங்கப்படாது. எனவே, பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு திருமலைக்கு திட்டமிட்டு வரவேண்டும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com