‘சோனம் வாங்சுக் கல்வி மந்திரியாக நியமிக்கப்பட வேண்டும்’ - அரவிந்த் கெஜ்ரிவால்

சோனம் வாங்சுக் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.
‘சோனம் வாங்சுக் கல்வி மந்திரியாக நியமிக்கப்பட வேண்டும்’ - அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி,

சமீபத்தில் மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள் கசிந்ததால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' போராட்டம் நடத்தி வருகிறது.

கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கிய இவர்களது போராட்டம் இன்று 26-வது நாளாக தொடர்ந்தது. இதற்கிடையே இந்த போராட்டத்துக்கு ஆதரவாக லடாக் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த மாத இறுதியில் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் 19-வது நாளை எட்டிய நிலையில், அவரது உடல் எடை 9 கிலோ குறைந்துள்ளது. நீண்டகால உண்ணாவிரதத்தால் அவர் ஆபத்தான கட்டத்தை எட்டி உள்ளதாகவும், இது அவரது உடல் உறுப்புகளை பாதிக்கக்கூடும் என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், சமாஜ்வாடி எம்.பி. டிம்பிள் யாதவ் ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு நேரில் சென்று, அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சோனம் வாங்சுக்கை சந்தித்தனர். அவர் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இருப்பினும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள சோனம் வாங்சுக் மறுத்துவிட்டார். இதுகுறித்து சோனம் வாங்சுக் கூறுகையில், "உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வது தவறான செய்தியை அளிக்கும். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு தன்னை வற்புறுத்துவதற்கு பதிலாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நாளான 20-ந்தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி திட்டமிட்டுள்ள நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை வலுப்படுத்த வேண்டும். மாணவர்கள் இதனை அரசியல், அறிவியல் மற்றும் ஜனநாயகத்தின் ஒரு உண்மையான பாடம் போல கருத வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, சோனம் வாங்சுக் மத்திய கல்வி மந்திரியாக நியமிக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக ஜந்தர் மந்தரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் 2011-ம் ஆண்டு இதே இடத்தில் அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதை நினைவு கூர்ந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் வினாத்தாள்கள் கசிந்து, இளைஞர்கள் அதற்கான விலையை கொடுக்கிறார்கள். மாணவர்கள் மற்றும் சோனம் வாங்சுகின் குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும். இன்று இங்கு வந்தபோது, ​​2011-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி நடந்த போராட்டம் எனக்கு நினைவுக்கு வந்தது. எங்கள் போராட்டத்திற்கு செவி சாய்க்க தவிறியதால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய அரசு ஆட்சியை இழந்தது” என்று தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com