சோனியா காந்தி, ராகுல் காந்தி ராணுவ ஒப்பந்தங்களில் தலையிட்டது கிடையாது - ஏ.கே. அந்தோணி

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ராணுவ ஒப்பந்தங்களில் தலையிட்டது கிடையாது என ஏ.கே. அந்தோணி கூறியுள்ளார்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி ராணுவ ஒப்பந்தங்களில் தலையிட்டது கிடையாது - ஏ.கே. அந்தோணி
Published on

புதுடெல்லி,

மத்தியில் முன்பு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பான பேரத்தில் நடந்துள்ள ஊழலில், பணபரிமாற்ற குற்றச்சாட்டில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை அமலாக்கத்துறை இயக்குனரகம் கடந்த 22ந்தேதி கைது செய்து விசாரணை செய்தது.

இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் விசாரணையின்போது, சோனியா காந்தி பெயரை தெரிவித்ததாக அமலாக்கத்துறை தனிக்கோர்ட்டில் தெரிவித்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, சோனியா காந்தியோ பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் தொடர்பு கொள்வதில் துளி அளவுக்கூட நாட்டம் கொண்டது கிடையாது என்பதை முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக உறுதிப்பட தெரிவிக்கிறேன். இவ்விவகாரத்தில் ஊழல் என்று இத்தாலியிலிருந்து தகவல் வெளியானதுமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது நான் தான். இந்த அரசு (மோடி அரசு) கிடையாது என்று கூறியுள்ளார்.

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் மோடி அரசின் விசாரணை தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய ஏ.கே. அந்தோணி, ஒப்பந்தத்தில் ஊழல் என்று எப்போது மீடியா செய்தி வெளியிட்டதோ, அப்போதே நாங்கள் விசாரணைக்கு உத்தரவிட்டோம். அமெரிக்கா, ரஷியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் உள்பட 5, 6 நிறுவனங்களை தவறிழைத்தோர் (பிளாக்லிஸ்ட்) பட்டியலில் சேர்த்தோம். அது எங்களுடைய சாதனையாகும். ஆனால் மோடி அரசு என்ன செய்தது?, என கேள்வியை எழுப்பினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com