அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்திருக்க வேண்டும்: ராகுல் காந்தி

சபாநாயகர் ஓம் பிர்லாவை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்திருக்க வேண்டும்: ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா நேற்று பதவியேற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசுகையில்,முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை அமல்படுத்தியது, அரசியல் சாசனம் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனிடையே, சபாநாயகரை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது. மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை சபாநாயகர் அறிவித்தார். இதனால், அவர், இந்தியா ' கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று சந்தித்தார். நாடாளுமன்ற செயல்பாடு குறித்து பல விஷயங்களை பேசினோம்.

அவையில் சபாநாயகர் அவசர நிலை குறித்து பேசியது குறித்தும் விவாதித்தோம். இது பற்றி பேசிய ராகுல் காந்தி, அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்து இருக்க வேண்டும். இது அரசியல் ரீதியிலான கருத்து என்பதால் நிச்சயம் தவிர்த்து இருக்க வேண்டும் என்றார்" இவ்வாறு அவர் கூறினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com