

புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலையால் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து 3-வது அலையும் இந்தியாவை பதம்பார்க்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் 3-வது அலையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து அவர் டுவிட்டர் தளத்தில் கூறுகையில், 3-வது அலை வந்தால் அதற்காக நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும். எனவே அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அதற்காக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி 3-வது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சிறப்புக்குழு அமைப்பது, போதுமான படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை கடந்த முறையை விட அதிகமாக வைத்திருப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன என்று தெரிவித்தார்.