

புதுடெல்லி,
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றார். இதையடுத்து, இலங்கையின் 9-வது அதிபராக திசநாயகே பதவியேற்றார்.
இலங்கையின் அதிபராக அநுர குமார பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்த அநுர குமாரவை நேற்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இலங்கை அதிபர் அநுர குமாரவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில், இன்று பிரதமர் மோடியை இலங்கை அதிபர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் பிரச்சனை, இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் ஆகியவற்றை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. முன்னதாக, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவுக்கு ஜனாதிபதி மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.