

திருமலை,
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, மனைவி மைத்ரி விக்ரமசிங்கே மற்றும் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் திருப்பதி வந்தார். பின்னர் அனைவரும் கார் மூலம் திருமலைக்கு சென்று விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தனர்.
அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை அவர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை 2.30 மணியில் இருந்து 3.30 மணி வரை நடந்த சுப்ரபாத சேவையில் இலங்கை பிரதமர் ரனில்விக்ரம சிங்கே, அவருடைய மனைவி மைத்ரி விக்ரமசிங்கே மற்றும் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் உள்ள தங்கக்கொடி மரம், பலி பீடம் ஆகியவற்றை வலம் வந்து வணங்கினர்.
முன்னதாக கோவிலில் உள்ள படிக்காவளி என்ற இடத்தில் ரனில் விக்ரமசிங்கே, எடைக்கு எடையாக 202 கிலோவுக்கு இந்திய சில்லரை நாணயங்களாக ரூ.16 ஆயிரத்து 160-ஐ துலாபாரம் வழங்கினார். பின்னர் ரனில் விக்ரமசிங்கே கோவிலில் இருந்து புறப்பட்டு தேவஸ்தான விடுதிக்கு சென்று ஓய்வு எடுத்தார்.