

ஸ்ரீநகர்,
2014-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் குல்காம் நகரில் பாகிஸ்தானின் லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி நவீத் ஜூட் கைது செய்யப்பட்டு ஸ்ரீநகர் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை மருத்துவ பரிசோதனைக்காக ஸ்ரீநகர் காகா சராய் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் நேற்று காலை அழைத்துச் சென்றனர்.
அவர்கள் மருத்துவமனை வளாகத்தை நெருங்கியபோது, அங்கு வந்த 6 பயங்கரவாதிகள் நவீத் ஜூட்டுக்கு பாதுகாப்பாக இருந்த 2 போலீசாரையும் நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். உடனடியாக அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான இருவரும் தலைமைக் காவலர்கள் முஸ்டாக் அகமது, பாபர் அகமது என்பது தெரிய வந்துள்ளது.இதற்கிடையே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போலீசார் அழைத்து வந்த பாகிஸ்தான் பயங்கரவாதியை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீட்டனர். பின்னர் போலீசார் வைத்திருந்த ஒரு நவீன ரக துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அவர்கள் தப்பியோடி விட்டனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தி பயங்கரவாதி மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், போலீஸ் பிடியில் இருந்து தப்பிய பயங்கரவாதி பாதுகாப்பான இடத்தை வந்து சேர்ந்ததாக ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் தெரிவித்துள்ளது.